அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவர்களுக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, நேற்று (26) தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகள் இருவருக்கும் தலா 40,00 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பிரதிவாதிகள் இருவரும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தலா 1 இலட்சம் வீதம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
1998 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி அல்லது அண்மித்த காலப்பகுதியில் களுத்துறை சிறைச்சாலையில் டக்ளஸ் தேவானந்தா எம்.பியை கொல்ல முயற்சித்ததாக சட்டமா அதிபர் பிரதிவாதிகள் மீது குற்றஞ்சாட்டினார். டக்ளஸ் தேவானந்தாவின் மண்டையோடுகளை உடைத்து பலத்த காயத்தை ஏற்படுத்தி, கொலை செய்ய முயன்றதாக கைதானவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆஜராகியிருந்தார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ். ஸ்கந்தராஜா மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த நிர்மலன் ரொஹான் ஆகியோர் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.
24 வருடங்களுக்கு முன்னர் சிறையில் உள்ள கைதிகளுக்கு தனது அரசியல் அதிகாரத்தால்
எவ்வாறான நிவாரணம் வழங்கப்படலாமென ஆராய்வதற்காக டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலைக்குச் சென்றபோது, பிரதிவாதிகளால் தாக்கப்பட்டு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய 27 காயங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும், இது ஒரு பாரதூரமான செயலாகும் என குறிப்பிட்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தலா 1 இலட்சம் ரூபா வீதம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டார்.



