எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம்சுமத்தி நடிகை தமிதா அபேரத்ன அண்மையில் கைது செய்யப்பட்டமை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியதையடுத்து இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
அப்பாவி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறையை நிறுத்துமாறும், நடிகை தமிதா அபேரத்னவை தடுத்து வைப்பதைத் தவிர்க்குமாறும் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
நாட்டில் இவ்வாறான அடக்குமுறைகள் தொடரும் போது அனைத்து அரசியல் கட்சிகளும் எவ்வாறு முன் வந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இதனை சுட்டிக்காட்டியதும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் தற்போதைய சட்டங்களின்படி குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்கு இணங்கி ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
“எதிர்க்கட்சித் தலைவரே, காழ்ப்புணர்ச்சிச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து உங்களுக்கு எந்தக் கவலையும் இருக்க முடியாது. நாம் அனைவரும் நீதித்துறையின் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நாங்கள் இருவருமே சாம்பியனாக இருக்கக் கூடாது” என்று நாமல்ராஜபக்ஷ கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷவுக்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், பொதுமக்களின் பிரதிநிதித்துவத்தை ராஜபக்ஷ குடும்பத்தாலோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவோ தீர்மானிக்க முடியாது என சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றிய ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவை தற்போது எழுதப்பட்ட கருத்தாக்கங்களாக மட்டுமே கருதப்பட முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்னவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
“அவர் 9 ஆம் திகதி காவல் நிலையத்தில் ஆஜராகும்படி கோரப்பட்டது. எவ்வாறாயினும், தியத்த உயனவுக்கு எதிரே நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பக்கம் நிற்பதைக் கூட எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம்” என சஜித் பிரேமதாச தனது விஜயத்தை தொடர்ந்து தெரிவித்தார்.
Opposition Leader @sajithpremadasa you cannot have any qualms regarding investigations into acts of vandalism. We all belive in the independence of the judiciary. Neither of us should champion those accused – @RajapaksaNamal #SriLanka #SriLankaEconomicCrisis #Colombo #SLnews pic.twitter.com/rISuTVexXz
— Manthri.LK_Watch (@ManthriLK_Watch) September 8, 2022




