வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற விருந்தில் சாப்பிட முற்பட்டதாக கூறப்படும் ஐந்து பாடசாலை மாணவர்கள், நகரசபை ஊழியர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பலர் முன்னிலையில் மாணவர்கள் முழந்தாளில் நிற்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நகர சபைக்கு அண்டியதாக வசித்துவரும், 12, 13, 16 மற்றம் 17 வயதுகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு முழந்தாள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நகர சபையின் மேயரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அங்குவந்த பொலிஸார், பல மணிநேரத்துக்குப் பின்னர், அந்த ஐந்து மாணவர்களையும் மீட்டுள்ளனர்.
சம்பவத்துக்கு முகங்கொடுத்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“ இந்தத் திருமண வைபவத்துக்காக கூடுதலான பேர் சமைத்தனர். அதில் மீதப்படும் உணவை உட்கொள்வதற்காக சென்றோம். இதற்கு முன்னரும் இவ்வாறு சென்றிருக்கின்றோம். சமையல் செய்யும் மாமா ஒருவரை எங்களை இன்று அழைத்து சாப்பிட்டுவிட்டுச் செல்லுமாறு கூறினார். நாங்கள் ஐவரும் சென்றபோது, அங்கிருந்த ஒருவர் கொஞ்சம் இருக்குமாறு கூறினார். அப்போது வந்த மேயரும் சிலரும் எங்களை திட்டிவிட்டு, படிக்கட்டுகளிற்கு அருகில் முழந்தாளிட வைத்தனர். பலரிற்கு முன்பாக முழந்தாளிட வைக்கப்பட்டதால் அவமானமாக இருந்தது’ என்றனர்.
இது தொடர்பில் வெலிகம நகரபிதா திருமதி யமுனா காந்தியிடம் கேட்ட போது, குறித்த நபர்கள் சிறுவர்கள் அல்ல எனவும், பலவந்தமாக உணவை கொள்ளையடிப்பதற்காக வந்த குழு எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இச்சம்பவத்தை எதிர்கொண்ட பாடசாலை மாணவர் குழுவிற்கு ருசியான மதிய உணவை வழங்குவதற்கு வெலிகம முன்னாள் மேயர் ரெஹான் ஜயவிக்ரம ஏற்பாடு செய்தார்.




