ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அலுவலகத்திற்குள்ளிருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான எதிர்கால விசாரணைகளை கொலை விசாரணையாக முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அமைப்பாளர் லக்ஷ்மன் திஸாநாயக்க மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் வியாழக்கிழமை கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லக்ஷ்மன் திஸாநாயக்க நேற்று கேகாலை நீதவான் வாசன நவரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆய்வு ஆதாரங்களில் இருந்து இந்த மரணம் கொலைதான் என பொலிசார் உறுதியாக நம்புகிறார்கள்.
கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சமந்த விஜேரத்ன, அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் பின்னர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் கவனம் செலுத்திய பொலிஸார், சந்தேகநபரான லக்ஷ்மன் திஸாநாயக்கவை கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தீர்மானித்துள்ளனர்.
யுவதியை சுட்ட துப்பாக்கியும் கைரேகை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் தொடர்பில் சந்தேகநபர் லக்ஷ்மன் திஸாநாயக்க முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கேகாலை நகரின் களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (01) காலை இந்த கொலை நடந்தது.
கேகாலை, அஹங்கம விதான ரலால ஹபுதுகல கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா வீரசிங்க (38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யுவதி அறைக்குள் நுழைந்து சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், சென்று சோதனையிட்டபோது, படுக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த அலுவலகத்தின் சிசிரிவி கமெரா தரவுகளை சோதித்த போது, லக்ஷ்மன் திஸாநாயக்கவே முதலில் அறைக்குள் பிரவேசித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதி அறைக்குள் நுழைந்ததாகவும், சுமார் 14 நிமிடங்களுக்குப் பிறகு, லக்ஷ்மன் திஸாநாயக்க வெறித்தனமாக வெளியே வந்து கைகளைக் கழுவிவிட்டு ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
லக்ஷ்மன் திஸாநாயக்கவுக்கும் யுவதிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கி யாருடையது என்பது தொடர்பிலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லக்ஷ்மன் திஸாநாயக்கவிற்கும், யுவதிக்குமிடையிலான தொலைபேசி உரையாடல்கள் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லக்ஷ்மன் திஸாநாயக்கவிற்கு தற்போது 62 வயது. கட்டிட ஒப்பந்தக்காரரான அவரிடம், உயிரிழந்த யுவதி 16 வருடங்களாக கடமையாற்றுகிறார். அவரது வியாபார நடவடிக்கைகளையும், பின்னர் பிரத்தியேக செயலாளராக கட்சி விவகாரங்களையும் யுவதி கவனித்துள்ளார்.
வழக்கமாக வீட்டிலிருந்து கட்சி அலுவலகத்திற்கு நடந்து செல்லும் யுவதியை, சம்பவ தினத்திலன்று லக்ஷ்மன் திஸாநாயக்க தனது பஜிரோவில் அழைத்து சென்றுள்ளார்.
யுவதிக்கும், மாத்தளையை சேர்ந்த கிராம சேவகர் ஒருவருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. எனினும், யுவதியை திருமணம் செய்ய வேண்டாமென லக்ஷ்மன் திஸாநாயக்க மிரட்டியுள்ளார்.
‘உன்னை திருமணம் செய்ய விட மாட்டேன்’ என யுவதியை லக்ஷ்மன் திஸாநாயக்க மிரட்டி வந்ததை, குடும்பத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர்.




