சீனாவின் சீவின் பயோடெக் உர நிறுவனம் சர்ச்சைக்குரிய கரிம உர ஏற்றுமதிக்காக செலுத்தப்பட்ட பணத்தை மீள வழங்கவோ அல்லது ஓர்டர் செய்யப்பட்ட கரிம உரத்திற்கு பதிலாக இரசாயன உரங்களை வழங்கவோ மறுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறுகையில், இலங்கையின் ஓர்டரிற்கு அமைவாக இந்த கரிம உரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என சீன நிறுவனம் வலியுறுத்துகிறது.
உர ஏற்றுமதி தொடர்பாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழு சீன நிறுவனத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் கூறினார்.
“சீன நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப் பெறுவது அல்லது செலுத்தப்பட்ட தொகைக்கான இரசாயன உரத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை நான் ஆராய்ந்தேன். இருப்பினும், இரண்டு கோரிக்கைகளுக்கும் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. முதலில் ஓர்டர் செய்தபடி கரிம உரத்தையே பெற வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பணம் மற்றும் உரம் இரண்டையும் இழக்கும் அபாயம் உள்ளது,” என்றார்.
இலங்கையில் கரிம உரங்களுக்கான தரநிலைகள் இல்லை எனவும், கரிம உரத்திற்கு தேவையான தரங்களை தயாரிக்குமாறு இலங்கை தரநிலை நிறுவனத்திற்கு பணிப்புரை வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.
“இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் நிர்ணயித்த தரங்களுக்கு இணையாக கரிம உரங்களை வழங்க முடியாது என்று சீன நிறுவனம் கூறியது,” என்று அவர் கூறினார்.
மேற்படி ஏற்றுமதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதாக தெரிவித்த அமைச்சர், மேலதிக நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க நீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்காக அமைச்சு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கோட்டாபய ஜனாதிபதியாக பதவிவகித்த பெரமுன ஆட்சிக்காலப்பகுதியில் சீனாவிலிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்ய முயன்று, அது சர்ச்சையானதையடுத்து, உரக்கப்பல் திரும்பி சென்றதும், ஆனால் அதற்கான கட்டணமாக 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.