இந்தியாவின் ஆளும் வட்டத்திலுள்ள மிக முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் சதித் திட்டம் தீட்டியிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதியை கைது செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பின் ஃபெடரல் செக்யூரிட்டி சேர்வீஸ் (FSB) இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக FSB வெளியிட்டுள்ள தகவலில், “மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளோம். 2022 ஏப்ரல் முதல் ஜூன் வரை அவர் துருக்கிய விஜயத்தின் போது பணியமர்த்தப்பட்டுள்ளார். டெலிகிராம் கணக்குகள் மூலமாகவும், பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதியால் இஸ்தான்புல்லில் தனிப்பட்ட சந்திப்புகள் மூலமாகவும் அவருக்கு போதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதியின் 57 வினாடி வீடியோவையும் ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
சத்தியப் பிரமாணம் மேற்கொண்ட பின்னர் ரஷ்யாவின் எல்லைக்கு புறப்படும் பணி வழங்கப்பட்டது. தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து இந்தியாவுக்கு சென்று, உயர் இலக்கை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஐஎஸ் அமைப்பு மற்றும் அத்துடன் தொடர்புடைய அனைத்திற்கும் தடை இருக்கிறது. தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் முதல் பட்டியலின்படி இந்தத் தடை அமலில் இருக்கிறது.




