தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 4 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், கார்த்தியின் ‘விருமன்’ பட வசூலும் ரூ.50 கோடியைத் தாண்டியுள்ளது.
‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்திரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் தனுஷுடன் இணைந்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையைமத்த இப்படம் கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
உலகளவில் 600 திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாள் பொசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. இதனால் இரண்டாவது நாள் ரூ.8.79 கோடியை படம் வசூலித்தது. மூன்றாவது நாள் ரூ.10.24 கோடியை எட்டியது.
இந்நிலையில், நான்காவது நாளான நேற்றை தினத்தின் வசூலையும் சேர்த்து படம் இதுவரை உலக அளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.50.54 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




