முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீடு அமைந்துள்ள மிரிஹான பங்கிரிவத்தை பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பொலிஸ் உயரதிகாரிகள் நேற்று (19) பிரதேசத்தில் உள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சூழவுள்ள பகுதிகள் விசேட கண்காணிப்பில் வைக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் சில தினங்களில் இலங்கை வரவுள்ளார் என அவரது செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்..
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.
CNN செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் வெளிவிவகார அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ பங்கு எதுவும் இல்லை எனவும், கோத்தபாய இலங்கை பிரஜை என்பதனால், அவர் விரும்பும் போது இவ்வாறு வந்து செல்லும் திறன் கொண்டவர் எனவும் அலி சப்ரி கலந்துரையாடலில் மேலும் தெரிவித்திருந்தார்.
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய தம்பதி தற்போது தாய்லாந்தில் அடைக்கலமாகியுள்ளனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஹொட்டலிற்கு வெளியில் எட்டியும் பார்க்கக்கூடாது என்ற கட்டுப்பாடு அவர்களிற்கு விதிக்கப்பட்டுள்ளது.




