தொழிலதிபரும், ராஜபக்ஷ குடும்பத்தினரால் இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டவருமான வேலுப்பிள்ளை கணநாதன், கென்யா பொதுத்தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய உயர் பதவிகளில் இருந்தவர்களை கொண்ட இந்த குழுவில், கணநாதனும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
கென்யாவின் பொதுத் தேர்தல் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற உள்ளது.
இதனை கண்காணிக்க, சர்வதேச பார்வையாளர் குழுவை கென்யா நியமித்துள்ளது. இதில் எதியோப்பியாவின் முன்னாள் ஜனாதிபதி முலாட்டு டெஷோம், தான்சானியா முன்னாள் ஜனாதிபதி ஜகாயா கிக்வேட், நைஜீரிய முன்னாள் ஜனாதிபதி குட்லக் ஜொனாதன், புருண்டியின் முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் எவரிஸ்டே பாமிஷிமியே, முன்னாள் சியர்ரா லியோன் முன்னாள் ஜனாதிபதி கொரோமா மற்றும் மொசாம்பிக் முன்னாள் ஜனாதிபதி ஜோகிம் சிசானோ.ஆகியோர் அடங்கிய அணியில் தூதுவர் கனநாதன் இணைந்துள்ளார்.
இவர்களைத் தவிர, ஜமைக்காவின் முன்னாள் பிரதமர் புரூஸ் கோல்டிங், ஆபிரிக்க யூனியன் தேர்தல் கண்காணிப்பாளர் மிஷன் எலன் டிங்கானி மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தல் பார்வையாளர் மிஷன் இவான் ஸ்டெஃபனெக் ஆகியோரும் இந்த குழுவில் உள்ளனர்.
கென்யாவில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியாக நடப்பதில்லை. 5 வருடங்களிற்கு ஒருமுறை ஓகஸ்ட் மாதத்தின் இரண்டாவது செவ்வாய்கிழமை தேர்தல் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விருப்பத்தினாலோ அல்லது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையினாலோ தேர்தல்கள் திடீரென வருவதில்லை. இந்த தேர்தலில் ஜனாதிபதி, தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள், செனட், மாவட்ட ஆளுநர்கள் மற்றும் 47 மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரே நாளில் மக்கள் வாக்களிப்பார்கள்.
இலங்கையைப் போல, ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான தனித் தேர்தல்களை நடத்துவதற்கான செலவை கென்யா தவிர்த்துள்ளது.
கென்ய ஜனாதிபதி வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஒரு வருங்கால வேட்பாளர், அங்கீகரிக்கப்படாத நிறுவனத்தில் பட்டம் பெற்றது கண்டறியப்பட்டதால் தேர்தலில் போட்டிய தடைவிதிக்கப்பட்டது.
கென்யாவில் எம்.பி.யாக இருப்பதற்கு உயர்தரத் தகுதியும் அமைச்சராக இருப்பதற்கு அடிப்படைப் பட்டமும் தேவை.