யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்திக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்திற்காக 3 நாட்கள் காலஅவகாசம் வழங்க யாழ் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (28) இடம்பெற்றபொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்திக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அது தொடர்பான விசாரணைகள் நடைபெறும் வரை, அவர் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவியை ஏற்கக்கூடாதென, யாழ் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், தாய்ச்சங்கத்திடம் எழுத்துமூலம் கோரியிருந்தனர்.அதைமீறி அவர் கடமைகளை பொறுப்பேற்றால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று வைத்தியர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
அதேவேளை, அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை நேற்று (27) ஆரம்பிக்கப்பட்டு விட்டதை சுகாதார அமைச்சு, தமது தாய் சங்கத்திற்கு வாய் மொழி மூலம் உறுதிப்படுத்தியதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில், இன்று விவாதிக்க, யாழ் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
இன்றைய கூட்டத்தின் முடிவில், ‘பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மீதான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்பில் நம்பகத்தன்மையான அவதானிப்புகள் இடம் பெற வில்லை எனின் மூன்று நாட்களின் பின்னர் கூடும் பொதுக்குழு கூட்டத்தில் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும்’ என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.