இலங்கை மிகை பணவீக்க நாடாக மாறியுள்ளதாக பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் 50 சதவீதத்தை தாண்டும் போது பொருளாதார வல்லுநர்கள் ஒரு நாட்டை மிகை பணவீக்கம் என்று அழைக்கின்றனர்.
2021 ஜூன் மாதத்தில் 5.2 சதவீதமாக இருந்த இலங்கையின் பணவீக்கம் 2022 ஜூன் மாதத்திற்குள் 54.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்தார்.
ஆசிய நாடொன்றில் பதிவான அதிகூடிய பணவீக்கம் இதுவென அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே உலகில் அதிக பணவீக்க வீதத்தைக் கொண்ட 10 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த அனைத்து நாடுகளின் பணவீக்க வீதமும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. 2021 ஜூன் முதல் 12 மாத காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் சராசரியாக 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக திரு.சிறிமல் அபேரத்ன தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 12 மாதங்களில் ரூபாயின் பெறுமதி பாதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25,000 ரூபாய் செலவழித்த குடும்பம் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதே தேவைகளைப் பூர்த்தி செய்ய 50,000 ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.




