அடுத்த பிரதமராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக தனக்கு நம்பிக்கையான மூலங்களில் இருந்து இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகளிற்கிடையில் இன்று இணையவழி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ‘எனக்கு சற்று முன்னர் ஒரு முக்கியமான, இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அடுத்த பிரதமராக எம்.எ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார்’ என்றார்.
இந்த கலந்ரையாடலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கலந்து கொண்டிருந்தார். அவர், இது தொடர்பில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
எனினும், பின்னர் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அது வெறும் வதந்தியாகவே இருக்கும் என்றார்.
அரசுகளில் அங்கம் வகிப்பது தமிழ் அரசு கட்சியின் கொள்கை அல்ல, அரசில் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் அரசு கட்சி எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு சரிவிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.ஒன்று கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை ஆதரித்தது. மற்றையது, நல்லாட்சிக்காலத்தில் அரசை ஆதரித்தது. அப்படியொரு தவறை தமிழ் அரசு கட்சி மீண்டும் செய்யாது என்றார்.




