நாட்டில் எரிபொருள் நெருக்கடி தலைவிரித்தாடி வரும் நிலையில், உடனடியாக இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளை உடனடி பணம் கொடுத்து கொள்வனவு செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் முதற்கட்டமாக, டீசல் இறக்குமதி செய்யப்படும். அதன்பிறகு, தேவைக்கேற்ப பெட்ரோல் அனுப்பப்படும். இருப்பினும், கொள்முதல் நடைமுறைக்கு வர குறைந்தது ஒரு வாரமாவது ஆகும்.
ஏற்கனவே, எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இலங்கை 700 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன்களை வாங்கியுள்ளது.
எனினும், நாட்டின் நெருக்கடி தீராத நிலையில் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது. இது தொடர்பான பேச்சு நடந்து வருகிறது.
இதேவேளை, எரிசக்தி பாதுகாப்பில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயற்படும் சாலை வரைபடம் ஒன்று தொடர்பாகவும் இலங்கை, இந்தியாவுடன் பேசி வருகிறது.
ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் இந்தியா எரிபொருளை கொள்வனவு செய்து வரும் நிலையில், அதே விலையில் இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்யும் சாலை வரைபடம் ஒன்றை இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட சமர்ப்பித்து பேச்சில் ஈடுபட்டு வருகிறார்.