அவிசாவளை காவல்துறையின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரிக்கு ரூ.250,000 இலஞ்சம் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (20) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து, அவிசாவளை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் விநியோகித்த குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
35 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி அவிசாவளை பொலிஸ் குற்றப்பிரிவின் OIC யை சந்தித்து, சந்தேக நபரை பிணையில் விடுவிக்க ரூ.250,000. பணம் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்பிரிவின் OIC, சீதாவகபுர பொலிஸ் பிரிவுக்கு அறிவித்ததுடன், இது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக ரூ.150,000 செலுத்துவதற்காக வந்த போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 32 வயதுடைய அவிசாவளை பகுதியைச் சேர்ந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவரின் நடவடிக்கைகள் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.