யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலங்களின் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது.
கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்த வேளை, நல்லூர் பிரதேச செயலர், தமது பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்க வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு பணித்திருந்தார். அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.
நல்லூர் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு நேற்றைய தினம் திருநெல்வேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையிலும், இன்றைய தினமும் கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தினையும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு ஒதுக்கியமையால் குழப்பங்கள் ஏற்பட்டன.
அதேவேளை கோப்பாய் பிரதேச செயலகத்தினரால் கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவித்தல் ஒட்டியமையால் குழப்பங்கள் ஏற்பட்டன.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த வேளை, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கு தான் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவித்தல் ஓட்ட பட்டமையால் குழப்பம் ஏற்பட்டு அறிவித்தல்களை கிழித்தெறிந்தனர்.
அதேவேளை நேற்றைய தினமே ஊர்காவற்துறை மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலகங்களால் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அறிவிக்கப்பட்டமையால், அவ்விரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் குழப்பங்கள் இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
பிரதேச செயலர்கள் திடீர் அறிவிப்புக்களே குழப்பங்கள் ஏற்பட காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரச பணி, அத்தியாவசிய பணியினருக்கு எரிபொருள் விநியோகம் என குறிப்பிட்டு, பொறிமுறை இல்லாமல் பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பெருந்தொகையான சாதாரண மக்கள் எரிபொருள் இன்றி நாட்கணக்கில் வரிசையில் காத்திருந்து அன்றாட வாழ்க்கை அச்சுறுத்தலாக மாறிவரும் நிலைமை உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.