மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி 3 குதா வீதியிலுள்ள வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
23 வயதுடைய பதுர்தீன் சுபைக் அகமட் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த இளைஞன் நேற்றிரவு தூக்கத்துக்கு சென்றவர் இன்று காலை தூக்கத்திலிருந்து எழும்பாத நிலையில் இவர் மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதையடுத்து, உறவினர்கள் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கதுமிந்த நயனசிறியின் வழிகாட்டலில், காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ரஹீம் தலைமையில் சென்ற பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, குறித்த வீட்டுக்கு சென்று சடலத்தை பார்வையிட்ட நீதவான் பிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டதோடு, உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞர் கடந்த 40 தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுதலையாகி இருந்தார் எனவும் தெரிய வருகிறது