சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை விரைவில் இறுதி செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது தங்கியுள்ள 10 பேர் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பிரதமர் விக்கிரமசிங்க நேற்று கலந்துரையாடினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான உதவிப்பொதி தொடர்பாக அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இந்த குழுவினர் நேற்று நாட்டுக்கு வந்திருந்தனர்.
உதவிப் பொதிக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியக் குழு ஜூன் 30 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நோசாகி தலைமையிலான சர்வதேச நாணய நிதியக் குழு இலங்கை அதிகாரிகளுடன் மே 9 முதல் 24 வரை கடன் வழங்கும் ஏற்பாட்டின் மூலம் ஆதரிக்கப்படும் ஒரு பொருளாதார வேலைத்திட்டத்தில் ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தியது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, தற்போது நடைபெற்று வரும் பிரச்சினைகளை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 5 பில்லியன் டொலர்களை பெற முயல்கிறது.