நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் போக்குவரத்து இடையூறுகளுக்கு மத்தியில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள விரல் அடையாளத்தினை பதிவு செய்யும் இயந்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ந. ஜெயதீபன் தலைமையில் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களிடமும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் புள்ளநாயகம் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோருக்கு குறித்த கைவிரல் அடையாளப் பதிவு இயந்திர முறைமையை ரத்து செய்யுமாறு கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் உரிய நேரத்தில் சமூகமளிப்பதை கண்காணிப்பதற்காக விரல் அடையாள பதிவு இயந்திரம் தற்போது அமுல் படுத்த பட்டுள்ளதாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக போக்குவரத்து மற்றும் எரிபொருள் பெறுவதற்கான சிரமம் அதிகரித்து வருகின்ற இச்சூழ்நிலையில் இந்த விரல் அடையாள பதிவு இயந்திரம் முறைமை சாத்தியமற்றது எனவும் அதனை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருள்களை பெற்றுக்கொண்டு பாடசாலைகளுக்கு சென்று கடமையாற்றுவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவம் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களுக்கு எரிபொருள் மற்றும் போக்குவரத்திற்கான விசேட திட்டமொன்றை வகுத்து பாடசாலைகளை உரிய நேரத்தில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
–ரவ்பீக் பாயிஸ் –