ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (15) நடந்த போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன், பிரதி சபாநாயகர் தெரிவில், பாராளுமன்ற நிலைமையை பொறுத்து, பாராளுமன்ற குழு கூடி தீர்மானம் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று இணைய வழியில் நடைபெற்றது.
மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், பா.சத்தியலிங்கம், ஆர்.இராகவன், கு.சுரேன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதென முடிவானது.
பிரதமர் ரணில் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இப்போதைக்கு சாத்தியமில்லையென்பதால், இந்த விடயத்தில் பின்னர் தீர்மானிப்பதென முடிவானது. ரணில் புதிய பிரதமராகியுள்ள சூழலில், பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உடனடி எதிர்ப்புக்களை வெளியிடுவதில்லை, எதிர்க்க வேண்டிய விடயங்களை மாத்திரம் எதிர்க்கலாமென்றும் கலந்துரையாடப்பட்டது.
பிரதி சபாநாயகர் தெரிவில் பொதுஜன பெரமுன தரப்பு வேட்பாளரை ஆதரிப்பதில்லையென்றும், அன்றைய தினம் பொருத்தமான வேட்பாளரை எதிர்தரப்பு பரிந்துரைத்தால், பாராளுமன்ற குழு கூடி ஆதரிக்கும் தீர்மானத்தை எடுக்கலாமென்றும் தீர்மானிக்கப்பட்டது.