பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலபிட்டிய மீண்டும் தெரிவாகியுள்ளார்.
அரசுக்கு எதிரான மக்கள் புரட்சியின் பின்னர் நாடாளுமன்றத்திற்குள் நடந்த பலப்பரீட்சையென்பதால் இன்றைய பிரதி சபாநாயகர் தெரிவு பரவலான எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது.
எனினும், சுதந்திரக்கட்சி, ஆளும் பொதுஜன பெரமுன தரப்பு ஆதரித்த ரஞ்சித் சியாம்பலபிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவாகியிருந்தார். இதே கூட்டணியின் ஆதரவுடன்தான் அவர் ஏற்கனவே பிரதி சபாநாயகராக தெரிவாகியிருந்தார். அரசிலிருந்து சு.க வெளியேறியதாக சொல்லப்பட்ட பின்னர் அவர் பதவிவிலகினார்.
மீண்டும் சபாநாயகர் தெரிவில் போட்டியிட்டு, ஏற்கனவே ஆதரித்தவர்களின் ஆதரவுடன் பிரதி சபாநாயகராகியுள்ளார். இதையொட்டி நிறைய திரைமறைவு நகர்வுகள் நடந்தன. குறிப்பாக, ரஞ்சித் சியாம்பலபிட்டிய போட்டியின்றி தெரிவாக வேண்டுமென்ற தீவிர முயற்சியும் நடந்தது இறுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு பகுதியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் விடாப்பிடியினாலேயே பிரதி சபாநாயகர் தெரிவு வாக்கெடுப்பு வரை சென்றது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரை களமிறக்கலாமென்ற பேச்சு கடந்த பல நாட்களாக இருந்ததுதான். ஆனால், நேற்று மாலை வரை இன்னொரு நகர்வும் ஆலோசிக்கப்பட்டு வந்தது.
பெரமுன தரப்பு ஒரு வேட்பாளரை நிறுத்தினால், அவரை சுலபமாக தோற்கடிக்கவும், அரசிலிருந்து விலகிய சுயேட்சை அணியை அரசுக்கு எதிராக செயற்பட வைக்கவும் ஒரு உத்தியாக, அரசிலிருந்து விலகிய சுயேட்சை அணியை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக்கலாமா என பரிசீலிக்கப்பட்டு வந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் இந்த யோசனை நேற்று சொல்லப்பட்டிருந்தது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்திலேயே, பொதுஜன பெரமுனவின் ஆதரவு, ரஞ்சித் சியாம்பலபிட்டியவிற்கு என கூறப்பட்டு விட்டது. சு.க அல்லது சுயேட்சை அணிக்கும், ராஜபக்ஷ தரப்பிற்கும் ஏதாவது உடன்பாட்டினால் அந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது பெரமுன வெற்றிகரமான உத்தியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
ஆனால் இன்றைய வாக்கெடுப்பை ஒட்டி இன்று சில சர்ச்சையான சம்பவங்கள் நாடாளுன்றத்திற்குள் நடந்தது.
சு.க தரப்பிலிருந்து ரஞ்சித் சியாம்பலபிட்டியவை வேட்பாளராக நியமிக்கப் போகிறார்கள், பெரமுன ஆதரவளிப்பார்கள் என்பது தெரிந்த பின்னரும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை பிரேரிப்பதில் தயக்கம் காட்டி வந்தது. வேட்பாளரை களமிறக்காமல் விடலாமென்ற யோசனையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிடம் இருந்தது.
எனினும், மனோ கணேசன் உள்ளிட்ட சில பிரமுகர்கள், பின்வரிசை எம்.பிக்கள் பலர் இதனை ஆதரிக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை களமிறக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை களமிறக்கா விட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன முடிவெடுக்கும் என்பதை அறிய ஐ.ம.சுவின் பின்வரிசை எம்.பிக்கள் ஆர்வம் காட்டியதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஒரு வேட்பாளரை களமிறக்கும்படியும், தாம் அந்த வேட்பாளரை ஆதரிப்போம் என்றும் பேச்சு நடத்தினார்கள்.
இதேவேளை, ஐ.மசு தலைமையிடம், ஒரு வேட்பாளரை பரிந்துரைக்கும்படியும், அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை பிரேரிக்கும் என்றும் கூட்டமைப்பு தெளிவாக தெரிவித்தது.
அத்துடன், த.சித்தார்த்தனின் பெயரை பிரதி சபாநாயகர் வேட்பாளராக பரிந்துரைக்கும் தீர்மானத்தையும் எடுத்தது.
இதற்குள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்தினார். ஒரு வேட்பாளரை பரிந்துரைத்து, பிரதி சபாநாயகர் தெரிவை வாக்கெடுப்பு வரை கொண்டு செல்ல வேண்டாம் என்றும், ரஞ்சித் சியாம்பலபிட்டியவை போட்டியின்றி தெரிவு செய்வோம் என்றும் கேட்டுக் கொண்டார்.
எனினும், கூட்டமைப்பினர் அந்த நகர்வை ஏற்க மறுத்தனர்.
போட்டியின்றி ரஞ்சித் சியாம்பலபிட்டியவை தெரிவு செய்தால், ஆளும் தரப்பிலிருந்து மேலும் 10 எம்.பிக்களை எதிரணி பக்கம் இழுக்கும் வாய்ப்புள்ளதாக ரணில் கூறினார்.
எனினும், கூட்டமைப்பினர் அந்த யோசனையை ஏற்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை களமிறக்கா விட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை களமிறக்குவார்கள், பிரதி சபாநாயகர் தெரிவு வாக்கெடுப்பு வரை செல்லும் என்பது உறுதியான பின்னர், ஐ.ம.ச தமது தரப்பிலிருந்து இம்தியாஸ் பாக்கிர் மார்க்கரை பரிந்துரைத்தது.




