இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் நேற்று (1) ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய எல்லைப் பகுதியில் படகு ஒன்று நிறுத்த பட்டிருப்பதைக் கண்டு படகில் வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் இலங்கையில் திருகோணமலை யை சேர்ந்தவர்கள் என்பதும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்தில் இன்று திங்கட்கிழமை (2) மதியம் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், இலங்கை திருகோணமலையை சேர்ந்த அனுரா என்பவருக்குச் சொந்தமான படகில் கடந்த 21ம் திகதி திருகோணமலையில் இருந்து புறப்பட்டது தெரிய வந்தது.
அவர்கள் மீன்பிடிக்கும் போது வழிதவறி வந்தார்களா அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர்களா என்பது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுஷ, அமிலா மசங்க, சுஜித் பண்டார, புத்திக, உஷன் மதுசன், துங்க மகேல ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

