யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள், குழுக்களிற்கிடையிலான இரண்டாவது சந்திப்பும் எந்த முடிவுமின்றி முடிவடைந்தது.
யு.எஸ் ஹொட்டலில் நேற்று (24) காலை 9.30 மணிக்கு கூட்டம் ஆரம்பித்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், அனந்தி குழு உள்ளிட்ட அரசியல் தரப்புக்களும், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சில குழுவினரும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த தரப்புக்கள் ஏற்கனவே ஒருமுறை கூடியிருந்தனர். அப்போதும் தீர்க்கமான எந்த முடிவும் எட்டப்பட்டிருக்கவில்லை.
நேற்று மீண்டும் கூடிய போது, அனந்தி, வேலன் சுவாமிகள் போன்றவர்கள் தென்னிலங்கை போராட்டம் உள்ளிட்டவற்றில் நாம் அக்கறை செலுத்த வேண்டியதில்லையென்றனர். அது சிறிலங்காவின் பிரச்சனை. தமிழர்களின் பிரச்சனை வேறு என்ற சாரப்பட கருத்து தெரிவித்தனர்.
வேலன் சுவாமி, இடைக்கால நிர்வாகமொன்று அமைக்கப்பட வேண்டுமென்றார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம் பற்றி பேசப்பட்ட போது, பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டன. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை நீக்கத்திற்கும் சிலர் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தென்னிலங்கை போராட்டங்களில் தமிழ் தரப்புக்கள் பங்கேற்கக்கூடாதென பெருமளவானவர்கள் கருத்து தெரிவித்தனர்.
எந்த தீர்மானமும் எட்டப்படாத இந்த கூட்டம் பற்றிய தொகுப்பை தயாரிக்கும் பொறுப்பு சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வழங்கப்பட்டது. அந்த பணி முடிந்ததும் கூட்டம் பற்றிய பத்திரிகை அறிக்கை வெளியிடப்படும்.