எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இயக்கக்கூடிய மின்சார முச்சக்கர வண்டியை பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்த முச்சக்கர வண்டி முதன்முதலில் பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சி கண்காட்சி 2022 இல் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறையின் பேராசிரியர் லலந்த சமரநாயக்க முச்சக்கர வண்டியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
“E” வீலர் என அழைக்கப்படும் இந்த மின்சார முச்சக்கர வண்டியானது ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ வரை பயணிக்கும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்த முச்சக்கரவண்டியை வியாபார ரீதியில் அறிமுகப்படுத்தும் போது, நாட்டில் உள்ள இரண்டு மில்லியன் முச்சக்கர வண்டிகளை மின்சார ஓட்டத்திற்கு மாற்ற முடியும்.
எரிவாயு மையங்களில் சிலிண்டர்களை நிரப்பிக் கொள்வதை போல, முச்சக்கரவண்டியின் பற்றரியை, நாடு முழுவதும் உள்ள நிறுவல் மையங்களில் சார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
அப்போது முச்சக்கர வண்டியின் உரிமையாளர் அதன் மின்சாரத்துக்காக மட்டும் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றார் பேராசிரியர்.
தனியார் நிறுவனம் ஒன்று தற்போது இந்த திட்டத்தை முன்னெடுக்க முன்வருவதாகவும் பேராசிரியர் லிலாந்த சமரநாயக்க மேலும் தெரிவித்தார்.