பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், எதிர்த்து வாக்களிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்து வலியுறுத்திய போதும், ஏனைய யாரும் அந்த நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. இதனால், பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சட்ட வரைபை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அண்மைக்காலமாக நடக்கும் உள்ளக கலந்துரையாடல்களில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிசுக்கும், தனக்கும் சுமுகமான கலந்துரையாடலும், தொடர்பும் இருப்பதாக வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த பின்னணியில், இன்று விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விடலாம் என கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
எனினும், அதனை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து, வாக்கெடுப்பில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது பற்றி ஆராய, தமிழ் தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடினர்.
இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இதன்போதும், திருத்த சட்டமூல வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கியிருக்கலாமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.அந்த வரைபில் சாதகமான சில அம்சங்கள் உள்ளதாகவும், அதனூடாக கிடைக்கும் இடைக்கால நன்மைகளை பெற்றுக்கொள்ளலாமென்றும் தெரிவித்தார்.
எனினும், கூட்டத்தில் கலந்து கொண்ட யாரும், அதை ஆதரிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டுமென்ற இறுதி நிலைப்பாட்டில் எந்த சமரசமும் செய்ய முடியாதென ரெலோ தரப்பினர் தெரிவித்தனர்.
இரா.சம்பந்தனும் அதனை ஆதரித்தார். புளொட்டும் அதே நிலைப்பாட்டையே கொண்டிருந்தது.
எதிர்த்து வாக்களிப்பதை தவிர மற்றொரு தெரிவு இருக்க முடியாதென சாள்ஸ் நிர்மலநாதனும் தெரிவித்தார்.
இதையடுத்து, பயங்கரவாத தடைச்சட்ட திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதென கூட்டமைப்பு முடிவு செய்தது.
அனைவரும் ஒரே முடிவை எடுத்தால், தானும் எதிர்த்து வாக்களிப்பதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் 1979ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, தமிழர் விடுதலை கூட்டணி வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.