மஹரகம பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நடனக் கலைஞர் இவந்திகா குமாரி ஹேரத்தின் மரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மரணம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பகஸ்வெவ, ஹிரியால, தரணகொல்லவைச் சேர்ந்த இவந்திகா குமாரி ஹேரத் (28) என்ற நடனக்கலைஞரே மரணித்திருந்தார்.
சட்ட வைத்திய நிபுணர் மூலம் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுகேகொட நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, விசேட நீதித்துறை வைத்திய அதிகாரி தசநாயக்க தலைமையில் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்று (14) பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரேதப்பிரிசோதனையில், தற்கொலை மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் அறையில் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கை நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 16ல் வர்த்தகர் ஒருவருடன் அந்தப் பெண் தங்கியிருந்தார். இருவருக்குமிடையில் திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தது தெரிய வந்துள்ளது.
நிக்கவெரட்டிய, மில்லகொட பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய இந்த வர்த்தகர் திருமணமாகி மூன்று பிள்ளைகளை கொண்டவர்.
மாதாந்தம் 30,000 ரூபா வாடகையில் இந்த அறையை அந்த வர்த்தகர் பெற்று, தனது திருமணத்திற்கு புறம்பான காதலியை தங்க வைத்துள்ளார். அங்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தார்.
கடந்த 12ம் திகதி இரவு 11 மணியளவில் வர்த்தகர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அறையில் மின்விசிறியில் பெண் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்துள்ளார்.
அவர் உடனடியாக கயிற்றில் இருந்து பெண்ணை விடுவித்து களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து, விசாரணைக்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுடன் தங்கியிருந்த வர்த்கர், அவரது பெற்றோர், சகோதரர் மற்றும் மூன்று பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
பின்னர் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
உயிரிழந்த பெண்ணும் விவாகரத்து பெற்றவர் எனவும், ஐந்து வருடங்களுக்கு முன்னர் சொந்த ஊரை விட்டு வெளியேறி கொழும்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.