இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கப்டன் சுரங்க லக்மல், இந்திய சுற்றுப்பயணத்தை முடித்ததைத் தொடர்ந்து அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இந்திய தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக, அவர் அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்மல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சமர்ப்பித்த கடிதத்தில், “இந்த வியக்கத்தக்க வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காகவும், எனது தாய் மண்ணின் பெருமையை மீண்டும் கொண்டு வர என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும் நான் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எனது தொழில் வாழ்க்கையை வடிவமைத்தது மற்றும் எனது தனிப்பட்ட வளர்ச்சியையும் செழுமைப்படுத்தியது” என குறிப்பிட்டுள்ளார்.
சுரங்க லக்மல் அனைத்து சர்வதேச வடிவங்களிலும் இலங்கைக்காக விளையாடி மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கினார்.
34 வயதான லக்மல் 2010 இல் கொழும்பில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அறிமுகமான பிறகு 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
அவர் 36.28 சராசரியில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக கடந்த டிசம்பரில் காலியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடினார்.
2009ல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
லக்மல் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 86 போட்டிகளில் 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அவர் 11 ரி20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
லக்மல் தனது முதல் தர வாழ்க்கையை 2007 இல் தமிழ் யூனியன் விளையாட்டுக் கழகத்துடன் தொடங்கினார்.




