திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவியை துறந்து, செயலாற்றக் கூடிய ஒருவரிடம் கையளிக்கும்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுவதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் ஒரு பகுதியினர் தயாராகி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தினால், தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டங்களை இரா.சம்பந்தன் தவிர்த்து வருவதாக, தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு, நேற்று நடந்து முடிந்துள்ளது. எனினும், இரா.சம்பந்தன் இதில் கலந்து கொள்ளவில்லை.
முதல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட போது, ‘இரா.சம்பந்தனும் கலந்து கொள்ள விரும்புகிறார், அவருக்கு பொருத்தமான திகதி அறிவிக்கப்படும்’எனகாரணம் கூறப்பட்டது. எனினும், கடந்த மத்தியகுழு கூட்டத்தை அவர் தவிர்த்து விட்டார்.
மத்தியகுழு கூட்டத்தில், திருகோணமலையை சேர்ந்த சில உறுப்பினர்கள், இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டுமென வலியுறுத்த திட்டமிட்டிருந்தனர். இந்த தகவலின் அடிப்படையிலேயே, மத்தியகுழு கூட்டம் சில முறை ஒத்திவைக்கப்பட்டது.
இரா.சம்பந்தன் செயற்பட முடியாமல் உள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்புரிமையையும் தக்க வைத்திருப்பது, மாவட்டத்தில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண சிபாரிசு, கையொப்பம், சின்னச்சின்ன பிரச்சனைகள் பற்றிய முறைப்பாடுகளை கூட அவரிடம் சொல்ல, பெற முடியாத நிலையில் உள்ளதாக திருகோணமலையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அண்மையில் திருகோணமலையில் தமிழ் சிறுமியொருவர் காணாமல் போயிருந்த நிலையில், அந்த விவகாரத்தை இரா.சம்பந்தனிடம் தெரிவிக்க பிரதேச மக்கள் முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் மனோ கணேசன் எம்.பி அதை அறிந்து, தலையிட்ட பின்னரே விவகாரம் வெளிப்பட்டது.
இரா.சம்பந்தனின் வயோதிபம் காரணமாக, அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக மாத்திரம் நீடித்து, வழிகாட்டுபவராக செயற்படுமாறு வலியுறுத்த அதிருப்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது பற்றி அறிந்து கொண்டுள்ள இரா.சம்பந்தன், மத்தியகுழு கூட்டங்களை தவிர்த்து வருவதாக அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.