மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சிஜடி என கூறி கடந்த 5 ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கணவரை கட்டிவைத்துவிட்டு மனைவியிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரித்து சென்றுள்ளனர்.
காதில் இருந்த தோடுகள், தங்க சங்கிலி உட்பட இரண்டரை பவுண் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் நேற்று (12) புதன்கிழமை கைது செய்துள்ளதுடன், கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்திய கோடரி, கத்தி, 3 கையடக்க தொலைபேசிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணையில் 2 பேர் கைது சச்யப்பட்டனர். அவர்களிம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை ஓட்டமாவடி, கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள வட்டவான் மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31,34,29 மற்றும் 31 வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது, 4 பேரும் நண்பர்களாகி, சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கொள்ளையடித்து வருகின்றனர். அதற்காக காரொன்றையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
கொள்ளையடித்த தங்க ஆபரணங்களை நிதி நிறுவனம் ஒன்றில் 191,000 ரூபாவுக்கு ஈடுவைத்து, அந்த பணத்தை பங்கு கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-எஸ்.கிருஷி-



