தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் அசண்டையீனமாக உடலுக்குள் வைத்து தைக்கப்பட்ட மருந்து கட்டும் துண்டு காரணமாக மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.
நோய்வாய்ப்பட்ட நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (11) இரவு உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, உடலுக்குள் காயத்திற்கும் கட்டும் துண்டு ஒரு சிறிய ரோல் காணப்பட்டது.
தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது, வயிற்றுப்பகுதியில் அசண்டையீனமாக காயத்திற்கு கட்டும் துண்டு உடலுக்குள் வைத்து சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது தெரிய வந்தது.
நெல்லியடியிலுள்ள ரூபின்ஸ் தனியார் வைத்தியசாலையில் அந்த மூதாட்டி கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதன்போதே, காயத்திற்கு கட்டும் துண்டு உடலுக்குள் வைத்து தைக்கப்பட்டுள்ளது.
யார்க்கருவை சேர்ந்த 60 வயதான மூதாட்டி, நேற்று உடல் நிலை மோசமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், நேற்றிரவே அவர் உயிரிழந்தார்.
அவர் உடல் இன்று பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, மருந்து கட்டும் துண்டு ஒரு ரோல் வயிற்றிற்குள் வைத்து தைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மருந்து கட்டும் துண்டு இருந்த பகுதியில் குடல் பழுதடைந்து, உடல் நஞ்சாகி மூதாட்டி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிசார், இன்று மாலை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர், சட்டவைத்திய அதிகாரி ஆகியோரை நாளை காலையில் மன்றில் முன்னிலையாகும்படி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.



