நுகர்வோருக்கு தரமான எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கான உறுதிமொழியை தொடர்ந்து வழங்குவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனமும் நுகர்வோர் விவகார அதிகார சபையும் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளன.
அண்மைய எரிவாயு கசிவு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு கோரி சிவில் சமூக ஆர்வலர் நாகானந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் பிரேரணை மூலம் அழைக்கப்பட்ட போதே லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் குறைந்தது இரண்டு எரிவாயு தொடர்பான வெடிப்புகள் இடம்பெறுவதால், எரிவாயு நிறுவனங்களும் நுகர்வோர் விவகார அதிகார சபையும் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு இணங்கத் தவறிவிட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்தார்.
குற்றச்சாட்டை மறுத்த இரண்டு தரப்புக்களும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும், ஜனவரி 3 ஆம் திகதி நடைபெறவுள்ள நிபுணர்களுடனான விசேட கலந்துரையாடலின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த மனு நீதியரசர்கள் ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.