தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அழைப்பையேற்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினர், அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளதாக தமிழ்பக்கம் இன்று காலையில் செய்தி வெளியிட்டிருந்தது.
எதிர்வரும் 6ஆம் திகதி கூட்டமைப்பு குழுவினர் நாட்டை விட்டு புறப்பட்டு செல்லவிருந்தனர். 7,8,9 ஆம் திகதிகளில் புதுடில்லியில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் கூட்டமைப்பினர் சந்திக்கவிருந்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்களை கூட்டமைப்பினர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய பயணம் மேற்கொள்ளவிருந்தனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்ட திகதிகளில் தனிப்பட்ட காரணங்களினால் கலந்து கொள்ள முடியாமலிருந்தது. இதனால் அவர் இம்முறை இந்தியா செல்வதில்லையென முடிவு செய்திருந்தார்.
ஏனைய நால்வரும் இந்தியா செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதியான பின்னர், இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே, கூட்டத்தை ஒத்திவைக்கும்படி கோரியதாக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
இதையடுத்து, கொழும்பிலுள்ள இந்திய தூதர் கோபால் பாக்ளே, நேற்று முன்தினம் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து, திட்டமிட்ட திகதியில் பயணத்தை ஏற்பாடு செய்ய பகீரத பிரயத்தனம் மேற்கொண்டார்.
எனினும், குறிப்பிட்ட திகதிகளில் இந்திய பயணம் மேற்கொள்ள முடியாதென்றும், பிறிதொரு தினத்தை ஒதுக்குமாறும் கூட்டமைப்பு கோரியுள்ளதாக தமிழ்பக்கம் அறிந்தது.