சுவீடனின் முதல் பெண் பிரதமர் மெக்டலினா ஆண்டர்சன் பதவி விலகியிருக்கிறார். பதவியேற்ற சில மணிநேரத்தில் அவர் பொறுப்பைத் துறந்தார்.
அவர் முன்வைத்த வரவுசெலவுத் திட்டம் எதிர்த்தரப்புக்குச் சாதகமாய் இருந்ததால் ஆளும் கூட்டணியின் பசுமைக் கட்சி அதை நிராகரித்தது. எனவே ஆண்டர்சன் பதவி விலக முடிவெடுத்தார்.
சட்டபூர்வ நடைமுறையைக் கேள்விக்குள்ளாக்கும் அரசாங்கத்தை வழிநடத்த விரும்பவில்லை என்று அவர் சொன்னார்.
தனித்தலைவராக, சமூக ஜனநாயகக் கட்சியை வழிநடத்த ஆர்வமாய் இருப்பதாக அவர் கூறினார்.
பொருளியல் நிபுணரான அவர், பிரதமராவதற்கு முன், நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
பதவி விலகுவதற்கு சற்று முன்னதாகவே அவர், சுவீடனின் முதல் பெண் பிரதமராக தெரிவானார்.
சுவீடன் நாடாளுமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் பிரதமராக இருந்த ஸ்டீபன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். சுவீடன் நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. எனவே, பல கட்சிகள் சேர்ந்துதான் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும்.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 349 இடங்களில் 175 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே பிரதமராக முடியும். சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாட்டின் இப்போதைய நிதியமைச்சர் மக்தலீனா ஆண்டர்சன் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார்.
நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் மக்தலீனாவுக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிராக 174 வாக்குகளும் பதிவாயின. 57 பேர் வாக்களிக்காமலும் ஒருவர் அவைக்கு வராமலும் இருந்துள்ளனர். எதிர்த்து வாக்களித்தவர்கள் அதிகம் பேர் இருந்தாலும் சுவீடன் நாட்டின் அரசியல் சட்டத்தின்படி புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதில் பெரும்பான்மை – அதாவது 175 உறுப்பினர்களின் எதிர்ப்பு பதிவானால்தான் அவர் தோல்வியடைந்ததாகக் கருதப்படும்.
ஆனால், 174 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததால் பிரதமராக மக்தலீனா வெற்றி பெற்று பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை 54 வயதான மக்தலீனா ஆண்டர்சன் பெற்றிருந்தார்.
எனினும், வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு கிடைக்காததால், பதவியை துறந்து விட்டார்.