100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்காததன் மூலம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இலங்கையை வலுவான செய்தியை அனுப்பியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளுக்கு உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதேவேளை, சீனாவும் ரஷ்யாவும் மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை.
உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட 110 நாடுகளில் தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளும் உள்ளடங்குகின்றன.
ஜனாதிபதி ஜோ பிடன் டிசம்பர் 9-10 திகதிகளில் மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்துகிறார். அரச தலைவர்கள், சிவில் மற்றும் தனியார் துறையினரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உச்சிமாநாடு கவனம் செலுத்துகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளில் தலைவர்கள் தனிப்பட்ட மற்றும் கூட்டு அர்ப்பணிப்புகளை அறிவிக்க ஒரு தளத்தை வழங்கும்.
இலங்கையின் பொறுப்புக்கூரல் விவகாரத்திலும், சீன ஆதரவு போக்கிலும் அதிருப்தியடைந்துள்ள மேலைத்தேய சமூகம், சீனாவின் வலுவான தொடர்புகள் நீடிக்கும் வரை சர்வதேச போக்கில் இலங்கை இணைவதில் சவால் இருக்குமென்பதை புலப்படுத்தும் விதமாக, இந்த மாநாட்டில் புறக்கணித்துள்ளது.



