பிரிட்டனில் ஒருவர் நூலகத்திலிருந்து இரவல் வாங்கிய புத்தகத்தை 73 ஆண்டுகள் கழித்து நூலகத்திடமே திருப்பிக் கொடுத்துள்ளார்.
ரூபர்ட் ஹியூஸ் எழுதிய Stately Timber என்ற அந்தப் புத்தகம், பிரித்தானியாவின் அப்போட் ஸ்ட்ரீட்டில் இருந்த டன்ஃபெர்ம்லைன் பொது நூலகத்தில், 1948ஆம் ஆண்டு இரவல் வாங்கப்பட்டது. 14 நாட்களிற்குள் புத்தகம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். அதன்படி 1948, நவம்பர் 6ஆம் திகதிக்குள் புத்தகம் மீள ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், 73 வருடங்களின் பின்னர் புத்தகம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதை வாங்கியவர் உயிரிழந்து விட்டார். புத்தகத்தை கண்டெடுத்த மகள், அதை அஞ்சல் வழியாக, நூலகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
புத்தகத்தை அனுப்பியவர் ஒரு குறிப்பையும் இணைத்திருந்தார்.
மறைந்த தமது தந்தை, புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டாரா அல்லது அதை வைத்துக்கொள்ள ஆசைப்பட்டாரா என்பது தெரியவில்லை என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புத்தகத்தை தாமதமாக ஒப்படைத்தால் தண்டம் செலுத்த வேண்டும். இந்த சம்பவத்தில் எவ்வளவு தண்டம் செலுத்த வேண்டுமென நூலக ஊழியர்கள் வேடிக்கையாக கணக்கிட்டு பார்த்ததில், 2,847 பவுண்ஸ் கணக்கிடப்பட்டதாக குறிப்பிட்டனர்.
எனினும், இந்த சம்பவத்தை விட, மிகவும் தாமதமாக புத்தகம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஏற்கனவே பதிவாகியுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் நூலகத்தில் இரவல் வாங்கப்பட்ட புத்தகமொன்று, 288 ஆண்டுகள் கழித்து ஒப்படைக்கப்பட்டது. 1668 இல் இரவல் வாங்கப்பட்ட புத்தகம் அது.
மிக தாமதமாக ஒப்படைக்கப்பட்ட புத்தகம் என்ற கின்னஸ் பட்டியலில் இந்த சம்பவமே பதிவாகியுள்ளது.