மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் மற்றும் குகநேசபுரம் கிராமங்களில் நிலவும் காணிப்பிணக்கு தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள இன்று (19) திம்புலாகல தேவாலங்கார தேரர் சென்றிருந்தார்.
தமது காணிப்பிணக்கை தீர்த்து தருமாறு சி.சந்திரகாந்தன், ச.வியாழேந்திரன், கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன் ஆகியோரிடம் முறையிட்டும், அவர்கள் யாரும் தமது கோரிக்கையை கண்டுகொள்ளாததையடுத்து, தேரரிடம் முறையிட்டதையடுத்தே, தேரர் அங்கு சென்றிருந்தார்.
தங்களது காணிகளை முஸ்லிம்கள் சிலர் அத்துமீறி அபகரித்து வருவதாகவும், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர்கள் சட்டவிரோதமாக காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுள்ளதாகவும், அதனால் தமது கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையென்றும் பிரதேசவாசிகள் இன்று குற்றம்சாட்டினார்.
பொலிஸ் நிலைத்திலும் முறைப்பாடு பதிவு செய்தும் பலன் எதுவும் கிடைக்கப் பெறவில்லையென்றும் தேரரிடம் கவலை தெரிவித்தனர்.
அத்துடன் தங்களது அரச ஆவணங்களையும் பார்வைக்கு சமர்ப்பித்தனர். பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு காணி அரச ஓப்பம் வழங்கப்பட்டிருந்தும் அதற்குள் பலாத்காரமாக பயமுறுத்தி குறித்த காணி பகுதிக்குள் சிலர் அத்துமீறி குடியேறி வருவதாகவும் அவர்களை வெளியேற்றி தருமாறும் தேரரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
சம்பவங்களை கேட்டறிந்து கொண்ட தேரர் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவ் விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறும் அதற்கான தீர்வு கிடைக்கப்பெறவில்லையென்றால், கிழக்கு மாகாண ஆளுநரிடம் முறையிடுவதாகவும் அதற்கும் தீர்வு கிடைக்கவில்லையென்றால் மட்டக்களப்பில் உள்ள காந்தி பூங்காவில் ஒன்று கூடி நியாயம் வேண்டி கவனயிர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட எல்லோரும் தயாரக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு மக்களும் சம்மதம் தெரிவித்தனர்.
மேற்படி கொழும்பு வீதியினை அன்மித்த குகநேசபுரம் மற்றும் ஆலங்குளம் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்தோர் சிலர் கடந்த ஒருமாத காலமாக கடை தொகுதி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகரை பிரதேச செயலகத்தின் அனுமதி பெற்றே இவ் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக கூறுகின்றனர்.தற்காலிக கடை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அருகில் வசிக்கும் நபர் தமக்கு வழங்கப்பட்ட காணியின் அளவினை விட மேலதிகமாக காணி அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த பிரதேசம் தற்போது காணிப் பிணக்கு அடிக்கடி இடம்பெறும் வலயமாக மாறியுள்ளது.
இதில் பிரதேச செயலகம் தமது பணியினை முன்னெடுக்க முடியாத அவல நிலமையில் உள்ளது.
இதனால் மக்கள் தங்களது அதிருப்தியினை அரசியல் பிரதிநிதிகள், பொலிசார்,மற்றும் அரசநிர்வாகங்கள் மீது வெளிப்படுத்துகின்றனர்.
குகநேசபுரம் கிராமம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் உருவாக்கப்பட்டது. துணைப்படையான கருணா குழுவின் நிதிப்பொறுப்பாளராக இருந்த குகநேசன் என்பவர், கொழும்பு, கொட்டாவ பகுதியில் விடுதலைப் புலிகளின் அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டிருந்தார். அவரது பெயர் கிராமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்களிற்காக உருவாக்கப்பட்ட அந்த கிராமத்தின் பல பகுதிகளை, அருகிலுள்ள ஓட்டமாவடி முஸ்லிம் மக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து விட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சட்டவிரோத காணி அபகரிப்பாளர்களிடமிருந்து தமது காணிகளை மீட்க, அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனிருக்கவில்லை. காணிகளை மீட்டு தந்தால், கிராமத்தின் மத்தியில் விகாரை அமைக்க தாமே காணி ஒதுக்கி தருவதாக பிரதேசவாசிகள் இன்று தெரிவித்தனர்.
எனினும், அப்படி செய்ய வேண்டியதில்லையென்றும், காணிகளை மீட்டு தருவது மட்டுமே தனது நோக்கம் என தேரர் தெரிவித்தார்.