தமிழரின் பாரம்பரிய நிலங்களில் சிங்கள பௌத்த மயமாக்கலை மேற்கொள்வதற்கு அங்கயன் இராமநாதன் தீவிரமாக வேலை செய்கின்றார் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றுமுன்தினம் (5) காரைநகரில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக கூறி, இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ஆகியோர் பார்வையிட சென்றனர். எனினும், இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பார்வையிட சென்ற அரச தரப்பினர், ‘தூபி இருந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்து, அங்கு சான்றுகள் மீட்கப்பட்டால் உங்களிற்குத்தான் பெருமை’ என, மக்களிற்கு விளக்கமளிக்கவும் முயன்றிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்த கஜதீபன் விளக்கமளிக்கையில்-
கோட்டபாய அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இரண்டு மூன்று மடங்காக அதிகரித்து மக்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குட்படுத்திய நிலையில் சிங்கள மக்களின் கடும் எதிர்ப்பினை சமாளிப்பதற்கும் மக்களை திசை திருப்புவதற்கும் தனி பௌத்த சிங்களம் என்ற கோட்பாட்டை கையிலெடுத்துள்ளது.
அதிலொரு பகுதியாகத்தான் தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வடக்கில் முகாமிட்டு தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் உள்ளதாக அடையாளப்படுத்த முற்படுகின்றார்.
அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தீவிரமாக வேலை செய்வது வெட்கக் கேடானது. இந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு துணை போகக்கூடாது என்றுதான் இந்த விடயங்களில் பங்கெடுக்காமல் பின்நிற்கின்றார் என்று எண்ணுகின்றோம்.
ஆனால் அங்கயன் இராமநாதன் எமது மக்களை முட்டாள்கள் என நினைத்து இவ்வாறான செயல்களை செயவதொன்றும் வேடிக்கையான விடயமல்ல. அவர் தனது வியாபாரத்திற்காக எமது மக்களை மட்டுமல்ல தமிழர்களின் அடையாளங்களை கூட மாற்றுவதற்கு துணைபோவார் என்பது சாதாரணமானது.
எனவே எமது மக்கள் தமது பூர்விக நிலங்களை விட்டுக்கொடுக்க கூடாது என்று காரைநகரில் துணிவுடன் செயற்பட்டது போன்று அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.