பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
பிரபல வில்லன் நடிகராக மக்களிடையே புகழ்பெற்றவர் நடிகர் மன்சூர் அலிகான். ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகரின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது குணசித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான், அரசியலில் பணியாற்றி வருகிறார்.
இவர் சென்னை சூளைமேடு பெரிய பாதையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மேற்குபுறத்தில் அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை 18 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவு என்பவரிடமிருந்து மன்சூர் அலிகான் வாங்கியுள்ளார். அதன்பிறகு இந்த இடம் புறம்போக்கு இடம் என்று தெரிய வந்ததுள்ளது.
இதையடுத்து 2019 ஆம் ஆண்டு தன்னிடம் நிலத்தை விற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் புகார் அளித்திருந்தார். அதோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள், இன்று நடிகர் மனுசூர் அலிகான் வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளனர்.