இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் உறவினர் ஒருவர் விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவரை சுட்டுக்கொன்ற விடுதலைப் புலி உறுப்பினர் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது தலையிலேயே லொஹான் ரத்வத்தை துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக சொல்லப்படுகிறது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வானொலியொன்றிற்கு வழங்கிய போட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அநுாதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டியிருந்தால் அது தவறானது. கண்டிக்கப்பட வேண்டியது. ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் என்ன நடந்ததென்பதை அறிய விசாரணை நடக்கிறது.
அந்த சம்பவத்தை ஏற்க முடியாதென்பதாலேயே, சம்பவத்தை கேள்விப்பட்டதும், விசாரணை முடியும் வரை அவரை பதவிவிலகும்படி பிரதமர் பணித்திருந்தார்.
நானும் அரசியல் கைதியாக இருந்தவன். என்னை யாரும் விடுவிக்கவில்லை. எம்மை நாமே விடுவித்துக் கொண்டோம். பின்னர் இந்திய இலங்கை உடன்படிக்கையின் மூலம் மன்னிப்பு வழங்கப்பட்டது. அதேபோல அந்த அரசியல் கைதிகளிற்கும் மன்னிப்பளிக்க வேண்டும்.
இதேவேளை, இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது. லொஹான் ரத்வத்தையின் உறவினர் ஒருவர் இராணுவத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும், அவரை சுட்டுக்கொன்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரின் தலையிலேயே லொஹான் ரத்வத்தை தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. அப்படி நடந்திருந்தாலும், அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.