சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை சிறைச்சாலைகளிற்குள் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையை முன்னெடுப்பதற்கு ஓய்வுப் பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுப் பெற்ற நீதிபதி குஷலா சரோஜினி வீரவர்தன நீதியமைச்சினால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு தன்னுடைய சகாக்களுடன் போதையில் சென்றிருந்த சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, அதிலொரு கைதியின் தலையில் கைத்துப்பாக்கிய வைத்து சுட்டுக் கொல்வதாக எச்சரித்துள்ளார்.
அத்துடன், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் நள்ளிரவுவேளையில் சென்றிருந்த அவர், தூக்குமேடையை பார்வையிட்டுள்ளார். இதன்போது, அவருடைய சகாக்கள் இருந்துள்ளனர்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஓய்வுப்பெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் என அரசாங்கமும் நீதியமைச்சும் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



