திருகோணமலையில் பிரசவித்து 6 நாட்களில் தாயாரால் கைவிடப்பட்ட சிசுவுக்கு தற்போது 11 மாதங்கள் வயதாகும் நிலையில், கந்தளாய் வைத்தியசாலை தாதியர்களால் காது குத்தும் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
தாதியர்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் அதிக பாராட்டு கிடைத்து வருகிறது.
கடந்த வருடம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த இளம் தாயொருவர் குழந்தையை கைவிட்டு தலைமறைவாகியிருந்தார். குழந்தை பிரசவித்து 6 நாட்களில் தாயாரால் கைவிடப்பட்டிருந்தது.
இந்த குழந்தை தற்போது திருகோணமலை சிறுவர் காப்பமொன்றில் தங்கியுள்ளது.
10 நாட்களின் முன்னர் குழந்தை சுகவீனமடைந்த நிலையில், அன்ரிஜன் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் கொரொனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை பிறந்து நேற்று முன்தினம் (13) 11 மாதங்கள் நிறைவடைகிறது. எனினும், குழந்தைக்கு இதுவரை காது குத்து நடத்தப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து, அந்த மருத்துவமனையின் 7ஆம் இலக்க விடுதியின் தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து குழந்தையின் காது குத்து நிகழ்வை மருத்துவமனையின் விடுதியில் எளிமையாக கொண்டாடினர்.
இதன்போது குழந்தைக்கு சில பரிசுப்பொருட்களும் அவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
10 மாதம் தனது வயிற்றில் சுமந்த குழந்தையை பிரசவித்து விட்டு அனாதரவாக விட்டு சென்ற கல் நெஞ்சுக்காரி வாழும் உலகிலேயே, இப்படியான மனிதாபிமானம் கொண்டவர்களும் வாழ்கிறார்கள்.