இலங்கை-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (10) இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ஒட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்பில் எய்டன் மார்க்ரம் 48 (33), குயின்டன் டி கொக் 36 (32), றீசா ஹென்ரிக்ஸ் 38 (30) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் வணிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர, மஹேஷ் தீக்ஷண, தசுன் சானக ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பதிலுக்கு 164 எனும் ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் 66 (54) ஓட்டங்களை பெற்றார். ரி20 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஓட்டம் இதுதான். அவர் ஒரு முனையில் சிறப்பாக ஆடினாலும், மறு முனையில் யாரும் அவருடன் சரியான இணைப்பாட்டத்தை ஏற்படுத்தவில்லை.
சமிக்க கருணாரத்ன இறுதி வரை களத்தில் போராடி 22 (14) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, தசுன் சானக்க 16 (14), அவிஷ்க பெனாண்டோ 11 (14) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர் ஏனையோர் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
தென்னாபிரிக்க அணி சார்பில் 5 வீரர்கள் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தனர்.
முதலாவது ரி20 போட்டியில் 28 ஓட்டங்களால் வென்ற தென்னாபிரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.
ஆட்ட நாயகனாக எய்டன் மார்ரம் தெரிவானார்.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறும் இத்தொடரின் 2வது போட்டி, நாளை (12), 3வது போட்டி செப்டெம்பர் 14 இலும் இடம்பெறவுள்ளது.