மாகாண பிரதி விவசாய பணிப்பாளரின் முடிவொன்றுக்கு எதிராக மன்னார் மாவட்டத்திலுள்ள விவசாயியொருவர், ஜனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் பதில் அனுப்பப்பட்டுள்ளது.
அரசாங்கம் நாடு முழுவதும் சேதன பசளை உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. விவசாயிகளின் சேதன பசளை உற்பத்திக்காக இயந்திர உதவிகளை வழங்கும் ஏற்பாடு விவசாயத் திணைக்களம் ஊடாக செய்யப்பட்டுள்ளது.
மன்னாரை சேர்ந்த விவசாயியொருவர் சேதன பசளை உற்பத்தி இயந்திரம் கோரி எழுத்துமூலம் விண்ணப்பம் செய்திருந்தார். தமது பகுதி விவசாய போதனாசிரியரின் ஊடாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அந்த வழியிலேயே அவர் விண்ணப்பம் செய்தார். எனினும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக, மன்னார், மாகாண பிரதி விவசாய பணிப்பாளரால் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, விண்ணப்பித்த மற்றையவர்களிற்கு இயந்திரம் வழங்கப்பட்டது.
விவசாய திணைக்களத்தில் எதிர்மறையான பதிவுகள் எதுவும் இல்லாத நிலையில், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என்ற குழப்பத்தில் அந்த விவசாயி இருக்கிறார்.
தனது முறைப்பாட்டை உடனடியாக கவனித்து, நடவடிக்கையெடுத்த ஜனாதிபதி செயலகத்தின் துரித நடவடிக்கையில் மகிழ்ச்சி தெரிவித்த அந்த விவசாயி, சேதன பசளை உற்பத்தியில் ஜனாதிபதி செயலகம் காட்டும் அக்கறையை இது புலப்படுத்துவதாகவும், எனினும், அதற்கான ஒத்துழைப்பு உள்ளூர் நிர்வாகத்தில் கிடைக்காதது துரதிஷ்டவசமானது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.