அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வீதி ஒன்றுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கவிக்கோ ஸ்டிரீட் – Kavikko Street- எனும் பெயரைக் கொண்ட அந்தத் வீதி, புகழ்பெற்ற தமிழக கவிஞரான கவிக்கோ அப்துல் ரகுமானை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அது மெல்ட்டன் (Melton) பகுதியிலுள்ள குருன்ஜங் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
வீதிக்கு அந்தப் பெயர் வரக் காரணமாக இருந்தவர் சிங்கப்பூர் பின்னணியுடைய எம்.ஏ.முஸ்தபா என்பவர். அந்த வட்டாரத்தில் அவருக்குச் சொந்தமான நிலங்கள் அமைந்துள்ள வீதிக்குத் தமிழ்ப் பெயர் சூட்ட விரும்பினார். அதன் விவரங்களை அளித்து, அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார்.
அதற்கு நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் வீதியொன்றுக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்படுவது இதுவே முதல்முறை என்றார் முஸ்தபா.
திரை உலகச் சார்பற்ற சிறப்பான கவிஞர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களுக்குக் கூடுதல் அங்கீகாரம் வழங்கப்படவேண்டும். வெளிநாட்டில் உள்ள மக்களும் அவர்களைப் பற்றி அறியவேண்டும் என்று யோசித்தேன்.
‘கவிக்கோ’ என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் பிரபல கவிஞர் அப்துல் ரகுமான், சாஹித்ய அக்கடமி விருது, கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.
இஸ்லாமிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதற்கும் அவர் முக்கிய பங்காற்றினார். தெருவுக்கு அவருடைய பெயரைச் சூட்டுவதில் பெருமிதம் கொள்கிறேன்“ என்று முஸ்தபா கூறினார்.
நவீன கவிதையில் முக்கியமான ஒரு இடம் கவிக்கோ அப்துல் ரகுமானிற்கு உள்ளது. அவர் தரமான திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



