இலங்கையில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸின் மூன்று பிறழ்வுகளும் கொழும்பை சேர்ந்த ஒருவரில் அடையாளம் காணப்பட்டுள்ளன. உலகிலேயே மூன்று தனித்துவமான பிறழ்வுகள் ஒருவரில் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு பிரிவின் இயக்குநரான வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்தார்.
“மூன்று பிறழ்வுகள் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மாதிரிகளில் ஆதிக்கம் செலுத்துவதாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.
டெல்டா பிறழ்விலிருந்து உருவான பிறழ்வுகளான A22V, A701S மற்றும் A1078S ஆகியன கொழும்பில் பெறப்பட்ட மாதிரிகளில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
இவற்றில், A221 பிறழ்வு உலகின் பிற பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. A1078S பிறழ்வு மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. A701S பிறழ்வு இலங்கையிலிருந்து உருவானது.
இதற்கிடையில், பல மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட COVID-19 நோயாளிகளின் 88 மாதிரிகள் ஆய்வுட்குட்படுத்தப்பட்டதில், 84 மாதிரிகள் டெல்டா வகையைச் சேர்ந்தவை என்பது தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.
“டெல்டா வகை தொற்று முக்கியமாக கொழும்பு மாவட்டத்தில் கண்டறியப்பட்டன. கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, வவுனியா, மஹரகம, மாலபே மற்றும் கம்பஹா ஆகிய இடங்களிலிருந்து ஏனையவர்கள் கண்டறியப்பட்டனர்.
இதன் மூலம் இலங்கையில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 117 டெல்டா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



