திருச்சி சிறப்பு முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழர்கள் இன்று மீண்டும் தமது போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதன்போது, ஒருவர் உடலினை கிழித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தினுள் அடைக்கலம் புகுந்த ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் சாதாரண அகதிகள் முகாமிலும் இன்னொரு பகுதியினர் திருச்சி சிறப்பு முகாமிலுமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமது உறவுகளுடன் தம்மை சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு குறித்த போராட்டக்காரர்கள் கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கடந்த மாதம் போராட்டக்காரர்களை சந்தித்து நிலுவையில் உள்ள அவர்களின் வழக்குகளை விரைவாக முடித்து தாயகம் செல்ல விரும்புவோரை தாயகம் அனுப்புவதாகவும் ஏனையவர்களுக்கு சாதாரண முகாமிற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தனர்.
காலங்கடந்தும் இன்னமும் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தே ஈழத்தமிழர் ஒருவரே இன்று தமது உடல்களை கிழித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் றமணன் (43) என்பவரே வயிற்றினை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
படுகாயமுற்ற அவரை சிறை காவலர்கள் விரைந்து மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தால் சிறப்பு முகாமில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.



