மட்டக்களப்பு கிரான் பிரதேசத்திலுள்ள பெண்டுகள்சேனை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்களை தேடி விவசாயிகள் சென்ற போது, பொலிசார் என நினைத்து, மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞன் தப்பி ஓடுவதற்காக குளத்தில் குதித்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (13) காலை 8 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய குலேந்திரன் இந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண்டுகள்சேனை, பூலாக்காடு பகுதியிலுள்ள வயல் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு கொடிகட்டி பறக்கிறது. இரவில் அதிரடிப்படையினரின் ரோந்து நடைபெறுவதால், அதிகாலை வேளையில் வயல் நிலங்களில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. உரிமையாளர்கள் வருவதற்குள் பல வயல்களில் மணல் அகழப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன.
இன்று, தமது வயலில் மணல் அகழும் தகவலறிந்த விவசாயியொருவர், வேறு சிலருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேரும், தொலைவில் நடமாட்டத்தை அவதானித்து, பொலிசார் வருகிறார்கள் என கருதி, நாலா திசையிலும் தப்பியோடிள்ளனர்.
ஒரு இளைஞன் அங்கிருந்து தப்புவதற்காக ஓடிச் சென்று அருகிலுள்ள மாதுறுஓயாவின் கிளையாறான கம்பித்துறை ஆற்றில் குதித்துள்ளார். 20 அடி ஆழமான ஆற்றிற்குள் குதித்த இளைனிற்கு நீச்சல் தெரியாது. அவர் நீரில் மூழ்கியுள்ளார். அங்கு சென்றவர்கள் வரைந்து செயற்பட்டு அவரை மீட்ட போதும், அவர் உயிரிழந்திருந்தார்.
மேசன் தொழிலில் ஈடுபட்ட அந்த இளைஞன் அதிக சம்பளம் கிடைக்கும் என கடந்த 2 வாரங்களாகவே சட்டவிரோத மணல் ஏற்றும் தொழிலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எச்.எம்.ரம்ஸின் சம்பவ இடத்திற்கு வந்து நிலமைகளை கேட்டறிந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
சடலம் உடற் கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




