உடல்நலக்குறைவால் மதுரை ஆதீனம், ஞானசம்பந்த அருணகிரிநாதர் (77) இன்று (13) காலமானார்.
சுவாச பிரச்னையால் அவதிப்பட்ட மதுரை ஆதீனம், கடந்த 09 ஆம் திகதியன்று மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாச சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியாகியிருந்தது.
அவர் இன்று இரவு 9.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இதன்தலைவராக 292 வது குருமகா சந்நிதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார்.
சைவமும் தமிழும் இரு கண்கள் என வாழ்ந்து வந்தவர் ஆதீனம் அருணகிரிநாதர். தமிழ்தொண்டு, சமூக தொண்டு ஆன்மீக தொண்டு என ஈடுபட்டு வந்தவர்.
தான் நினைப்பதை சரி என்று நினை க்க கூடிய அரசியல் சமூக கருத்துக்களை முன்வைத்தவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி ஜெயலலிதாவுடன நட்பு பாராட்டி வந்துள்ளார்.
கடந்த 2019இல், திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரானான சுந்தரமூர்த்தி தம்பிரானை இளைய ஆதீனமாக அறிவித்து, ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் சூட்டினார்.
முன்னதாக ஆதீனம் தங்கி இருந்த அறைக்கு தர்மபுரி ஆதீனம் பூட்டி சீல் வைத்தார். வழக்கமாக ஆதீனம் நீண்ட காலம் மடத்திற்கு வராமல் இருந்தால் அவரது அறைக்கு சீல் வைப்பது வழக்கம். தற்போது ஆதீனம் காலமானதால் இன்று சீல் வைக்கப்பட்டது.
மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.