ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கடலோர பகுதியில் இருந்து நேற்று (புதன்கிழமை) காலை 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் படகில் ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை பார்த்து இந்தப்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மீனவர்கள் அந்தப்பகுதியில் இருந்து மீன்பிடி வலைகளை சேகரித்துக்கொண்டு புறப்படும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டி அடித்தனர். உயிருக்கு பயந்த மீனவர்கள் அங்கிருந்து படகுகளை ராமேசுவரம் கடலோரப் பகுதி நோக்கி செலுத்தினார்கள். அங்கு வந்த அவர்கள் நள்ளிரவில் மீன் பிடித்துக்கொண்டு இன்று காலையில் கரை திரும்பினர்.
இலங்கை கடற்படை விரட்டியடிப்பால் 50-க்கும் அதிகமான படகுகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை மீன்பிடி வலைகள் மற்றும் சாதனங்கள் சேதமடைந்ததால், இதனால் பல லட்ச ரூபாய் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது பாதிக்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்கின்றனர். இலங்கை கடற்படையின் தாக்குதலால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின் வரும் மீனவர்கள் முன்னதாகவே கரைக்கு திரும்பி விட்டனர். இதனால் மண்டபம் கடற்கரையில் இன்று காலை மீன்வரத்து குறைவாக காணப்படவில்லை.



