முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோத்தபாய கடற்படை முகாமிற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில் குறித்த காணி அளவீட்டு பணிகளுக்காக காலை 7 மணிக்கே நிலஅளவைத் திணைக்கள உயரதிகாரிகள் கடற்படை முகாமுக்குள் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அளவீடு செய்வதற்காக ஊழியர்களை ஏற்றிவந்த வாகனத்தை கடற்படை முகாமிற்கு செல்லவிடாது மறித்த பொது மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து வருகை தந்த அதிகாரிகளை அளவீட்டு பணியை நிறுத்துமாறு திருப்பி அனுப்பியிருந்தனர். போராட்டக்காரர்கள் கடற்படை முகாமில் இருந்த நில அளவைத் திணைக்கள உயர் அதிகாரியை வெளியே வருமாறு கூறி கடற்படை முகாமுக்கு முன்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நில அளவைத் திணைக்கள ஊழியர்களை கடற்படையினர் தமது வாகனத்தில் மாற்று வழியூடாக கடற்படை முகாமிற்கு சென்று நில அளவை பணிகளை மேற்கொள்ள முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நில அளவீட்டை நிறுத்துமாறு கோரி வட்டுவாகல் பகுதியில் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியை மறித்து மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படையினர், கலகம் அடக்கும் கடற்படையினர் மற்றும் பெருமளவான பொலிஸார் புலனாய்வாளர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு போராட்டம் மேற்கொள்பவர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளார்.




















-கே .குமணன்-