ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கும் இலங்கை சுதந்திரக் கட்சிக்குமிடையில் இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களிற்கு, சில அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களினால் நடக்கும் அநீதிகள் குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதில் கவனம் செலுத்தி அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என தயாசிறி தெரிவித்தார்.
கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் மஹிந்த அமரவீர, தேர்தல் முறை திருத்தம், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் மற்றும் உரங்கள் வழங்குவது போன்ற பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், கலந்துரையாடல் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துணை சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலபிட்டி, அமைச்சர்கள் நிமல் சிறிபாலா டி சில்வா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்கள் தயசிறி ஜெயசேகர மற்றும் துமிந்த திசானாயக ஆகியோர் இலங்கை சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன், தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க கலந்து கொண்டார்.